நூற்றுக்கணக்கான கோடிகள் மோசடி செய்ய திமுக அரசு திட்டம்… எடப்பாடி கே. பழனிசாமி

0

கிராமப்புறங்களில் எல்இடி திரைகள் அமைக்கும் திட்டத்தின் பின்னணியில், நூற்றுக்கணக்கான கோடிகள் மோசடி செய்ய திமுக அரசு திட்டமிட்டுள்ளதாக, அதிமுக பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“ஒரு அரசு பொறுப்பேற்கும் முக்கிய நோக்கம், மக்களின் நலனுக்காக பணியாற்றுவதாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய திமுக ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகம், கடந்த நான்கு ஆண்டுகளாக, மக்கள் சேவையை விட, லஞ்சம் மற்றும் சொந்த செல்வாக்கை பெருக்கும் நோக்கத்தில் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

தங்களது பல்வேறு தோல்விகளை மறைக்கவும், நிர்வாகத் திறனற்ற போக்கை மூடி மறைக்கவும், திமுக அரசு வெறும் விளம்பரங்களை மட்டுமே முன்னிறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,620 கிராம ஊராட்சிகளில், அரசு செயல்பாடுகளை எல்இடி திரைகளில் மக்கள் முன் காண்பிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, மூன்று நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு ஒப்பந்தங்களை கோர வேண்டும் எனவும், மதுரையை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எல்இடி திரைகளை நிறுவும் பணி வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் சுமார் ரூ.7.50 லட்சம் செலவில், மேலும் ஒவ்வொரு கிராம ஊராட்சிக்குமான சிறிய அளவிலான திரைக்கு ரூ.10,000 செலவில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் பஞ்சாயத்து கிளார்க்குகள் அந்த நிறுவனத்திடம் திரைகளை உடனடியாக வாங்கி, ஒப்பந்த ஆணை உடன் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீடுகள் சந்தை விலைக்கு மீறி இருக்கின்றன, மேலும் பல்வேறு ஊராட்சிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளுக்கே நிதி இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

2006–2011 திமுக ஆட்சி காலத்தில், மக்கள் நலன் என்ற பெயரில் இலவச டிவி வழங்கப்பட்டு, அந்த வாயிலாக தங்கள் குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஆதாயம் பெற்றது. தற்போது மீண்டும் விளம்பர அரசியலுக்காக கோடிக்கணக்கில் ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

திமுக அரசு, தங்கள் நான்காண்டு ஆட்சியின் மேம்பாடுகளை வீடியோவாக உருவாக்கி, எல்இடி திரைகள் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் ஒளிபரப்பி, மக்களை தவறான தகவல்களால் ஏமாற்ற திட்டமிட்டுள்ளது. இது ‘கமிஷன், கலக்ஷன், கரப்ஷன்’ என்ற கொள்கையின் கீழ் செயல்படும் ஊழல் அரசின் ஒரு ஓர் உதாரணமாகும்.

மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு வீணடித்து, தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்தும் திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். யாருக்கும் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் அரசு செலவிடும் ஒவ்வொரு ரூபாயுக்கும், மக்கள் எப்போதாவது பதிலளிக்கச் செய்வார்கள். அது விரைவில் நடைபெறவுள்ள ஆட்சி மாற்றத்தின் மூலம் வெளிப்படும்.”

இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Facebook Comments Box