அதிகவேகத்தில் வாகனம் இயக்குவதால் உயிரிழக்கும் நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கர்நாடக மாநில ஹாசன் மாவட்டம் மல்லசந்திரா கிராமத்தைச் சேர்ந்த ரவிஷா, 2014ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி தனது குடும்பத்துடன் காரில் பயணம் செய்தார். அந்த நேரத்தில் அவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளாகி, ரவிஷா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது மனைவியும் குடும்பத்தினரும் ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை பரிசீலித்த உயர்நீதிமன்றம், ரவிஷா மிகுந்த வேகத்திலும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டது எனக் கூறி, காப்பீட்டு நிறுவனத்துக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்ற காரணத்துடன் மனுவை நிராகரித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக, ரவிஷாவின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையில், ரவிஷா மிகுந்த வேகத்தில் காரை ஓட்டியுள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
இதனை அடிப்படையாக கொண்டு, அவரது குடும்பத்தினரின் மேல்முறையீடும் நிராகரிக்கப்பட்டது. அதிவேகமும் கவனக்குறைவான முறையிலும் வாகனம் ஓட்டி உயிரிழக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க தேவையில்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.