மடப்புரம் கோயில் காவலர் மரணம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் – விசாரணை மாவட்ட நீதிபதிக்கு ஒப்படைப்பு

0


மடப்புரம் கோயில் காவலர் மரணம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கடுமையான கண்டனம் – விசாரணை மாவட்ட நீதிபதிக்கு ஒப்படைப்பு

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலராக பணியாற்றிய அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமற்போனது குறித்து விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்று தாக்கியதால் உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் ஏ.டி.மரியகிளாட், “ஒருவரை கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்தவர்கள்கூட இதுபோல கொடூரமாக நடந்திருக்கமாட்டார்கள்” என வேதனைத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் ஒப்படைத்து, உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில், திருப்புவனம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக்ராஜா உள்ளிட்ட பலர், கோயிலிலும் காவல் நிலையங்களிலும் உள்ள சிசிடிவி பதிவுகளை பாதுகாக்கவும், சிபிஐடி விசாரணையை நீதிமன்றம் நேரடி கண்காணிப்பில் வைக்கவும் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன் மற்றும் மாரீஸ்குமார் வாதிடும்போது, “அஜித்குமாரை சிறப்புப் படை போலீசார் பிளாஸ்டிக் குழாய், இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கினர். தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் நடைபெறும் போது, சில அரசியல் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், அரசு வேலை வாக்களித்ததாகவும் கூறினர். புகார் அளித்த நபர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் நெருங்கிய உறவினர் என்பதாலே இந்த தாக்குதல் திட்டமிட்டதாய் நிகழ்ந்தது” என்றனர்.

நீதிபதிகள், “சிறப்புப் படையை விசாரணைக்குப் பயன்படுத்த உத்தரவிட்டது யார்? அஜித்குமாரை பல இடங்களுக்கு அழைத்துச் செல்ல அதிகாரம் கொடுத்தது யார்? எஸ்பியை காத்திருப்பு பட்டியலில் வைப்பது ஏன்?” என கடுமையாக கேள்வி எழுப்பினர்.

அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார் தாக்கல் செய்தார். அதைப் பார்த்த நீதிபதிகள், “உடலில் எங்கும் அடித்ததற்கான அடையாளங்கள் உள்ளன. மிளகாய்த்தூள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறித்தனமான தாக்குதல். இது சாதாரணக் கொலை அல்ல; திட்டமிட்ட கொலை” என கூறினர்.

விசாரணை மற்றும் அறிக்கைகள்

  • மதுரை 4வது கூடுதல் மாவட்ட நீதிபதி உடனடியாக விசாரணையைத் தொடங்க வேண்டும்.
  • சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்கள், சாட்சிகள், மற்றும் மருத்துவ அறிக்கைகள் அரசாங்கம் ஜூலை 8-க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
  • சம்பவத்தை நேரில் பார்த்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
  • அஜித்குமாரின் மரணம் சட்டவிரோத காவல் மரணம் என்பதால், இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Facebook Comments Box