கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

0

கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்டாப் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னையில் நேற்று நடைபெற்ற ‘வெற்றி நிச்சயம்’ திட்ட தொடக்க விழாவில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்த ஆண்டுமுதல் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என தெரிவித்தார். இந்த விழா, தமிழக சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வாகும்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூன்றாவது ஆண்டு விழாவும், ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் தொடக்க விழாவும் ஒரே மேடையில் நடைபெற்றது. இதில், உலக திறன் போட்டி 2026-க்கு ஆன்லைன் பதிவு தொடக்கத்தையும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்திய மாநிலங்களில் அதிகமான 9.69 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதன்மை பெற்றுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பயனாளர்களின் எண்ணிக்கை 41 லட்சத்தை கடந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில்நுட்பப் பயிற்சிகள், தகவல் தொழில்நுட்பம், மொழிப் பயிற்சி, ஹேக்கத்தான்ஸ், இண்டர்ன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த மூன்று ஆண்டுகளில், 3.28 லட்சம் மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம், படிப்பு நின்று விட்டோர் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு குறுகிய கால திறன் பயிற்சி வழங்கப்படும். இதற்கான அனைத்து செலவுகளையும் அரசு ஏற்கும். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு முன்னுரிமையுடன், ரூ.12,000 வரை ஊக்கத்தொகையும் வழங்கப்படும். தங்கும் மற்றும் உணவு வசதியும் வழங்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின், “மாணவர்களுக்கு உதவ நான் இருக்கிறேன். திராவிட மாடல் அரசு உங்கள் பக்கம் இருக்கிறது,” என கூறினார். துணை முதல்வர் உதயநிதி, ஆண்டுக்கு 75,000 மாணவர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்படும் என்றும், ரூ.100 கோடி முதற்கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

38 தொழிற்பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் 165 வகையான பயிற்சிகள் வழங்கப்படும் என அவர் கூறினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, ராஜகண்ணப்பன், மேயர் ஆர்.பிரியா, உயர் கல்வித் துறை செயலர் பொ. சங்கர், திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநர் கிராந்திகுமார் பாடி, சிஐஐ தலைவர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வின் முடிவில், சிறப்புத் திட்ட செயலாளர் பிரதீப் யாதவ் நன்றி தெரிவித்தார்.

Facebook Comments Box